30/03/2019
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் 14,79,961 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 7,24,688, பெண் வாக்காளர்கள் 7,55,199, மூன்றாம் பாலினத்தினர் 74 பேர் உள்ளனர்.
சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:-
அரக்கோணம் (தனி) 2,13,956
சோளிங்கர் 2,59,869
காட்பாடி 2,34,328
ராணிப்பேட்டை 2,51,533
ஆற்காடு 2,47,449
சென்னைக்கு மிக அருகில் உள்ளது அரக்கோணம். இங்கு ஏழைகள், நடுத்தர மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். கல்வி, வேலை உள்ளிட்ட அனைத்திற்கும் சென்னைக்கு சென்று வருகின்றனர். அரக்கோணத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான ஐ.என்.எஸ்.ராஜாளி, மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி மையம், தேசிய பேரிடர் மீட்பு படை பயிற்சி மையம், 8 பிளாட்பாரங்கள் கொண்ட பழமை வாய்ந்த ரெயில் நிலையம் உள்ளது.
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி 1977-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அப்போது இந்த தொகுதியில் அரக்கோணம் (தனி), பள்ளிப்பட்டு, சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு, செய்யாறு ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்று இருந்தது.
2008-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டபோது அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் அரக்கோணம் (தனி), திருத்தணி, காட்பாடி, சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றது.
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் குடிசை தொழிலாக நெசவுத்தொழிலை செய்து வருகின்றனர். நெமிலி, பனப்பாக்கம், மின்னல், குருவராஜபேட்டை பகுதியில் கைத்தறி பூங்கா ஏற்படுத்தி தர வேண்டும் என்பது நெசவாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.
அரக்கோணத்தில் ரெயில்வே சார்ந்த படிப்புகளுக்கான மையத்தை ஏற்படுத்தவும், அரக்கோணத்தில் மூடப்பட்ட இரும்பு தொழிற்சாலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ராணிப்பேட்டையில் தோல், ரசாயன தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நிலத்தடி நீராதாரத்தை பாழாக்கி வருவதை தடுக்க வேண்டும். காட்பாடியில் உள்ள தமிழ்நாடு வெடிமருந்து நிறுவனத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்பதும் கோரிக்கையாக உள்ளது.
பாலாறு, பொன்னையாறு, கொசஸ்தலை, கல்லாறு ஆகிய ஆறுகள் அரக்கோணம் தொகுதியை கடந்து செல்கின்றன. இந்த ஆறுகளில் தடுப்பணை கட்ட வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. அரக்கோணம் ரெயில் நிலையத்தை அதிநவீன வசதிகள் கொண்ட ரெயில் நிலையமாக மாற்ற வேண்டும் என்றும் மக்கள் விரும்புகிறார்கள். முக்கியமான பாலங்களுக்கு தேவைப்படும் கர்டர்கள், உதிரி பாகங்கள் அரக்கோணம் ரெயில்வே பணிமனையில் செய்யப்பட்டு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த பணிமனையின் தரத்தை உயர்த்தி வேலைவாய்ப்பை பெருக்கவேண்டும் என்பதும் கோரிக்கையாக இருக்கிறது.
Source Srini Vasan