28/07/2020
பெருந்திரைக் கனவு!
__________________________
படம் பார்ப்பதாக, அல்லது இந்தப் படத்தைப் பார்த்து விட்டுதான் புறப்படப் போகிறோம் என்கிற எந்த முன்னேற்பாடும் வீட்டிலிருந்து கிளம்பும்போது எனக்கு இல்லை.
சித்தப்பா மட்டும் அவர் மனதிற்குள் அந்த திட்டத்தை வைத்திருந்து இருக்கலாம்.
என் மனதில் அப்போ விரிந்திருந்தது எல்லாம் சென்னையை நோக்கிய பயணமும், என் கனவு தேசமான கல்லூரியை எப்போ காணப் போகிறோம் என்கிற ஏக்கமும் தான் !
12 மணிக்கு மேல பஸ் ஏறினா போதும்,விடியற்காலை மெட்ராஸ் மண்ணை மிதிக்கலாம், செகண்ட் ஷோ படம் பார்த்துட்டு வந்து பஸ் புடிச்சா சரியா இருக்கும், என ஆத்தூர் NS தியேட்டருக்கு என்னை இழுத்து செல்கிறார் சித்தப்பா..
"உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்" படம்.. திரை வண்ண விளக்குகள் மின்ன மேலெளுகிறது ! எனக்கான வெளிச்சம் விரவுவதை உணர்கிறேன்.. நானே இயக்குனன் ஆனது போலான உணர்வு !
கலை இயக்குனர் யார் என்று பார், பெரும்பாலும் அந்தக் கல்லூரியில் படித்தவர்கள் தான், ஒரு நாள் உன் பெயர் இந்த திரையில் வர வேண்டும், நான் கை தட்டி அதை இங்கே ரசிக்க வேண்டும் என்கிறார் சித்தப்பா..
ஆனால், எனக்கு ஏனோ இயக்குனர் ஆக வேண்டும் என்பதுதான் என் விதை காலம் முதல் கனவு.. அப்போதே கதை என்று எதேதோ கிறுக்கி வைத்திருப்பேன். என் ஓவியங்களுக்கு மத்தியில், அதை பொறுக்கி வைத்தும் இருப்பேன்.
படம் முடித்து, பஸ் பிடித்து சென்னை பயணம், தூக்கம் இல்லை, துரத்தும் கனவுகள் மட்டும்..
தாம்பரத்தில் இறங்கி, எங்கோ சித்தப்பா வுக்கு தெரிந்தவர் வீடு, எங்கு தங்கினோம் என இப்போ எனக்கு தெரியாத வீடு.
கடமைகளை முடித்துவிட்டு உடமைகளோடு, கல்லூரி விலாசம் தேடி பயணிக்கிறோம்.
தாம்பரம் புறநகர் இரயில், புது அனுபவம், இரயில் பயணம் என்பது என் நினைவுக்கு தெரிந்து அதுதான் என்பேன், பார்க் டவுனில் இறங்கி நடையாக பயணப்பட்டு, கல்லூரிக்கு பக்கத்தில் உள்ள, பெட்ரோல் பங்கில், College of Arts and Crafts எங்க இருக்கு என்கிறோம், தெரியாது என்கிறார்கள். ஓவியக் கல்லூரி, படம் வரையிற கல்லூரி என விளக்குன்றோம், விவரம் தெரியவில்லை அவர்களுக்கு... மீண்டும் வந்த இடத்துக்கே வந்து நொந்து நாங்களே தேடலானோம். பெட்ரோல் பங்குக்கு பக்கத்திலேயே, சிறிய கேட்டுக்குள் பெரிய கலைநயம் பதுங்கிக் கிடப்பதை கண்டு பிடிக்கிறோம்!
பங்க் கு மீண்டும் வந்து என்னங்க உங்க பக்கத்துல இருக்கு, பார்த்தது இல்லையான்னு கேட்டா,
அவன், முன்னாடியே "பொம்மை காலேஜ்" னு சொல்லி இருக்கலாம் ல...
கல்லூரி..
நுழைவுத்தேர்வு..
முதல் முறை தோல்வி..
(ஆனால், நண்பர் Ganesan Muthu அறிமுகமானார், அவர் அந்த ஆண்டு நுழைவுத்தேர்வு வில் வெற்றி பெற்றவர்.கடிதம் வாயிலாக எனக்கு நம்பிக்கை தந்தார், விடுதி அழைத்து சென்று பயிற்சியும் தந்தார், பின் நான் கல்லூரி வருவதற்கு பல முயற்சியும் எடுத்தார்..அவர் நண்பர் இல்லை அன்பர் என்பேன், அதைக்காட்டிலும் எனக்கு அண்ணன் இல்லாத குறையை தீர்த்தவர் என்பேன்!)
அடுத்த ஆண்டு அடிச்சது சீட்..
1999 ஓவியக் கல்லூரி மண்ணில் என் கால் மிதந்தது, எண்ணமோ இயக்குனர் இருக்கையில்..
ஓராண்டு கரைந்தது தெரியவில்லை.. பல்வேறு மேற்கத்திய ஒவியர்களை, அவர்களின் பாணி களை,
painting medium களை, கல்லூரி எமக்கு அறிமுகம் செய்தது.. அதில் முக்கியமானது oil Painting !
Oil painting மீது கை வைத்தபோது உள்ளத்தில் Rembrandt,vangogh க்கள் வந்து போனார்கள்.. பிக்காசோ வரிசையை பின்தொடர்ந்து பெரிய ஆர்டிஸ்ட் ஆனது போல பெருமிதம் !
இரண்டாம் ஆண்டு, எதாவது கிரேட் ஆர்டிஸ்ட் ஒர்க்கை copied செய்ய சொன்னார்கள்.. நான் தேர்வு செய்ததோ,Albrecht Durer ன் self portrait ஐ ! அந்த கண்ணின் ஈரம், அந்த hair style ன் தூரம் என்னை ஈர்த்தது..
விடுமுறையில் வீட்டில் வைத்து வரைந்தேன்..என் சித்தப்பா அதை பார்த்திருக்க கூடும், Oil Painting இவனது கைக்கு வசப்பட்டது கண்டு, இவன் பெயர் ஒரு நாள் திரையில் வருமென்று, அவர் கை தட்டும் நாளுக்காக காத்திருக்க கூடும்..
ஆனால் அந்த ஆண்டே, காலம் அவரை கரைத்து விட்டது, எங்களை விட்டு எங்கோ எட்டா தூரம் கடத்தி விட்டது..
அவரில்லாது
ஆண்டுகள் இருபது இப்போ..நான் வரைந்த மற்ற ஓவியங்களை அவர் பார்த்து பாராட்டும் வாய்ப்பு எனக்கு வாய்க்கவில்லை..
நானும் அவரின், என் கனவுகளின் வழி போகாது, தடுமாறி, தடம் மாறி எங்கோ வந்துவிட்டேன்..
ஆனால், அந்த ஆல்பர்ட் டியூரரின் கண்கள் வழியே என் கண்ணா சித்தப்பா என்னிடம் கதைத்துக் கொண்டிருக்கிறார் !
பொண்டாட்டி கட்டிட்ட, புள்ளை யும் பெத்துட்ட , உன் கனவை எப்போ பிரசவிக்கப் போற..
எப்போ உன் பெயரை BIG ஸ்க்ரீனில் பார்ப்பேன் ?