04/05/2022
அனைவருக்கும் வணக்கம் 🙏
இப்ப உள்ள சூழ்நிலையில் கட்டுமான பொருட்களின் விலை அதிகரிப்பால் சதுர அடிக்கு ரூ.250முதல் ரூ.300 கூடுதல் செலவாகுது...எனவே சென்னையில் சதுர அடி ரூ.2500 ம் கோவை,தஞ்சை,திருச்சியில் ரூ.2400 க்கும் சேலம், நாமக்கல், ஈரோட்டில் ரூ.2300 க்கும் செய்தால்தான் கட்டுப்படியாகும்...கிராமங்களில் 2000 செலவாகும்...
காண்ட்ராக்ட் எடுத்து செய்வோர் எக்குத்தப்பாக சம்பாதிக்கிறார்கள் என பலர் எண்ணுகிறார்கள்...இது ரொம்ப தவறு...10% லாபம் கிடைத்தாலே பெரிய விஷயம்தான்...திடீர் விலை ஏற்றம் பொருள் தட்டுப்பாடு என்றால் இந்த லாப சதவீதம் வெறும் 5% க்குகூட வருவதுண்டு...சிலர் போட்டிபோட்டு குறைவான ரேட்டுக்கு எடுத்து இழப்பை சந்திப்போரும் உண்டு...சிலர் வேலையை போட்டுவிட்டு ஓடிவிடுவர்...பல பஞ்சாயத்துகளும் நடக்கும்...
எனவே சிலர் குறைவான ரேட்டுக்கு செய்வதாக சொன்னால் வேலையை ஒப்படைத்து சிக்கலில் மாட்டிக்காமல் இருப்பதே சிறந்தது...இந்த துறையில் முறையாக செய்து நல்ல பேருடன் தொழில் செய்வோர் பத்து சதவீதம் பேர்தான் இருப்பர்...இதற்கு பொறியாளர்கள் பக்கம் மட்டும் குறை இல்லை வீட்டுக்காரர்கள் பக்கம் குறை இருக்கு...குறைவாக ரேட் சொல்வோர்களுக்கு வேலை தந்து சிக்கலில் தவிக்கின்றனர்...இன்றைய கட்டுமான பொருட்களின் திடீர் உயர்வு கட்டுனர்களை நிலைகுலைய செய்துள்ளது...
கடந்த வருடத்தைவிட கம்பி டன்னுக்கு ரூ.25000 ஏறிவிட்டது...சிமெண்ட் மூட்டை ரூ.100 ஏறிவிட்டது...செங்கல் ஜல்லி விலையும் அவ்வாறே ஏறியுள்ளது...எலக்ட்ரிக்கல்,பிளம்பிங்,பெயிண்டிங் மற்றும் மர சாமான்கள் விலை 20% சதவீதம் ஏறிவிட்டது...இதனால்தான் கட்டுமான ரேட்டும் எகிறவேண்டிய சூழல்...கம்பி,சிமெண்ட் விலை தற்போது ஏறிய விலையில் பாதி குறைந்தால்கூட சதுர அடிக்கு ரூ.50 தான் மேற்சொன்ன கட்டுமான ரேட்டில் குறையும்...
ஒரு பத்து சதுரம் வீட்டுக்கு இன்று தோராயமாக மொத்த வேலைக்கும் கணக்கிட்டால் 25 லட்சம் செலவாகும்...இதை ஒரு பொறியாளர் காண்ட்ராக்ட்டாக எடுத்து செய்தால் 2 முதல் 2.50 லட்சம் லாபம் கிடைக்கலாம்...குறைந்தது ஆறு மாத கால வேலை என்றாலும் மாதம் அந்த பொறியாளுருக்கு 30000 முதல் 40000 ரூபாய் கிடைக்கலாம்...ஒரு கொத்தனாரே இன்று மாதம் மாதம் 25000 ரூபாய் சம்பாதிக்கிறார்...வேலைகள் அதிகமாக நடந்தால் நீங்க நினைப்பதுபோல் ஒருவர் மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்க இயலும்...
இந்த எதார்த்தத்தை வீடு கட்டுவோர் புரிந்துகொண்டால் அவர்களது வீடு சிறப்பாக அமையும்...பலர் பேச்சை கேட்டு குழப்பமாகி வீடு கட்டும் பொறியாளர்களிடம் உறவை மோசமாக்கிக்கொண்டால் வீடு கட்டுவோருக்குதான் இழப்பு...அதே நேரம் பொறியாளர்களும் தாங்கள் போட்ட ஒப்பந்தத்தில் உள்ளதுபடி மீறாமல் அல்லது வேலைகளை குறைக்காமல் செய்துதரவேண்டியது கடமை...குறித்த காலத்தில் பேமெண்ட் தராத வீட்டுக்காரர்களாலும் பிரச்சனை வருது...பணத்தை வாங்கிக்கொண்டு வேலையை நேரத்துக்கு முடித்து தராத பொறியாளர்களாலும் சிக்கலே...
ஆகையால்தான் நான் இப்போது தெரிந்தவர்கள்,நண்பர்கள்,உறவுக்காரர்களுக்கு காண்ட்ராக்ட் அடிப்படையில் செய்யாமல் கன்சல்டிங் அடிப்படையில் வேலையை செய்து தருகிறேன்...இங்கே பொறியாளருக்கு பண இழப்புக்கும் வேலை இல்லை...வீட்டுக்காரருக்கும் நாம் ஏமாந்தோமா என்ற எண்ணமும் ஏற்படப்போவதில்லை...அதேநேரம் கன்சல்டிங் முறை வேலையில் வீட்டுக்காரருக்கு பொருட்களை ஏற்பாடு செய்து தரும் பெரிய பொறுப்பு இருக்கு...மாதச்சம்பளத்துக்கு வேலை செய்வோர் இதற்கு பயந்தே மொத்த காண்ட்ராக்ட் விட்டுவிடுவர்...
கட்டுமானத்தொழில் செய்வதும் சாதாரண விஷயம் கிடையாது என பலருக்கு புரிய வைப்பதற்காகவே இந்த பதிவு.